கொலை செய்யப்பட்ட பூங்கோதையுடன் கணவர் ஜோகிந்தர் 
செய்திகள்

சுரண்டையில் புதுப்பெண் கொலையில் முக்கிய தடயம் சிக்கியது

சுரண்டையில் புதுப்பெண் கொலையில் முக்கிய தடயம் சிக்கி உள்ளதால் தப்பி ஓடிய அவரது கணவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

மாலை மலர்

நெல்லை:

சுரண்டை அருகே உள்ள உச்சிபொத்தை கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகள் பூங்கோதை (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அங்கு மேற்பார்வையாளராக வேலை பார்த்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் வேலை பிடிக்காமல் 2 பேரும் சுரண்டை கோட்டை தெருவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடியேறினர். ஜோகிந்தர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் தூங்க சென்ற பூங்கோதையை ஆத்திரத்தில் இருந்த ஜோகிந்தர் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார்.

பின்னர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு இரவோடு இரவாக தப்பி சென்றார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி சென்ற ஜோகிந்தரை தேடி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பு 2 பேரும் வேலை பார்த்த திருப்பூர் கம்பெனி, ஜோகிந்தரின் நண்பர்கள் வசிக்கும் இடம் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.

கொலை சம்பவம் நடந்த வீட்டில் ஜோகிந்தரின் உடமைகள், அவருடைய ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளதாகவும், அவரது செல்போன் சிக்னலை வைத்தும் அவரது இருப்பிடத்தை விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.