விபத்து பலி 
செய்திகள்

போடி அருகே கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கி பெண் பலி

போடி அருகே கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போடி:

போடி அருகே உள்ள டி.சிந்தலைச்சேரி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சகாய திரவியம். பழ வியாபாரி. இவரது மனைவி சுமதிமேரி (வயது 38). இவர்கள் இருவரும் கொய்யா மற்றும் பப்பாளி பழங்களை போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்புவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை சுமதிமேரி விற்பனை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ராசிங்காபுரம் சுண்ணாம்பு காளவாசல் அருகே வந்த போது அவரது சேலை மோட்டார் சைக்கிளின் பின்புற சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுமதிமேரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.