மதுரை:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மதுரை மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.சரவணன் கூறியதாவது:-
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது, அதை சித்தரிக்கும் பேனர்களில் முதல்வர் படம் இடம்பெறுவதுபோல், பிரதமர் மோடியின் படமும் இடம்பெற வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது.
இதை நாங்கள் திமுகவிடம் முறையிடவில்லை, தமிழக அரிசிடம்தான் முறையிடுகிறோம்.
இந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பும் உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் முதல்வரின் படத்துடன் பிரதமரின் படத்தை பயன்படுத்த வலியுறுத்தி வருகிறோம்.
இதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும். இந்த கோரிக்கை புதிய கோரிக்கை அல்ல. 1990-ம் ஆண்டு பொதுக் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையின்படி, பிரதமர் உள்பட 9 தலைவர்களின் படங்கள் பொது அலுவலகங்களில் இடம்பெறலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்