பிறப்பு சான்றிதழ் 
செய்திகள்

பிறப்பு சான்றிதழில் தாய் பெயரை சேர்ப்பது தனிப்பட்ட விருப்பம்- மத்திய அரசு விளக்கம்

பல்கலைக்கழகங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆகியவற்றில் மாணவர்களுடைய பெயரை பதிவுசெய்யும்போது தந்தையின் பெயரோடு தாயாரின் பெயரையும் சேர்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

‘பிறப்பு சான்றிதழிலும், அரசின் இதர ஆவணங்களிலும் உரியவரின் பெயருக்கும், தந்தையின் பெயருக்கும் இடையில் தாயாரின் பெயரை சேர்ப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் திட்டம் உள்ளதா? அரசாங்க நடவடிக்கைகளில் ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்கு மகளிர் நல அமைச்சகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?’ என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிறப்புச் சான்றிதழ்களிலும், அரசாங்கத்தின் இதர ஆவணங்களிலும் தாயாரின் பெயரை ஒருவரின் பெயரோடு சேர்ப்பது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது ஒரு குடிமகனின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாகும். அரசாங்க நடவடிக்கைகளில் ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் சட்டம் 1969-ன் கீழ், பிறப்பை பதிவு செய்யும் விண்ணப்பத்தில் தாயாரின் பெயரை பதிவு செய்வதற்கும், தாயாரின் ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்...திருப்பதி: உயர்ரக பசுக்களில் இருந்து கிடைக்கும் பொருட்களால் மூலவருக்கு நைவேத்தியம்