பாரதி பாஸ்கர் 
செய்திகள்

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான பாரதி பாஸ்கர் தனது நகைச்சுவை பேச்சால் உலக அளவில் தமிழர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.

கெமிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ள இவர் வங்கியில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பாரதி பாஸ்கர் கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த மருத்துவ முயற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தெரிகிறது. பாரதி பாஸ்கர் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், ஜெபங்கள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இன்னும் ஒரு வாரம் வரை அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்...அடுத்த மாதம் டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்