திருப்பூர்:
திருவாரூரை சேர்ந்த ஞானசேகரன் மகன் சின்ராசு (வயது 32). திருமண மாகவில்லை. இவர் திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பனியன் நிறுவனத்தில் தேனியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவரும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 9 நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்தார்.
பனியன் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அறையில் சின்ராசுவும், ராஜ்குமாரும் தங்கியிருந்து வந்தனர். இதனால் அவர்கள் நண்பர்களாகினர். அடுத்துள்ள அறையில் சின்ராசுவின் மற்றொரு நண்பர் கண்ணன் தங்கியிருந்து வந்தார்.
இந்தநிலையில் மே தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கை காரணமாக 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் சின்ராசுவும்,கண்ணனும் நேற்றிரவு டாஸ்மாக் கடைக்கு சென்று 2 நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வந்தனர். அந்த மதுபாட்டில்களை சின்ராசு அவரது அறையில் வைத்துக் கொண்டார். கண்ணன் அவரது அறைக்கு சென்றதும், சின்ராசுவுக்கு போன் செய்து, மதுபாட்டில்களை பத்திரமாக வைத்துக்கொள். ராஜ்குமாருக்கு தெரிந்தால் எடுத்து குடித்து விடுவான் என்றார். கண்ணன் பேசியது ராஜ்குமாருக்கு தெரியவரவே ஆத்திரமடைந்த அவர், சின்ராசுவிடம் நான் என்ன திருடனா? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த ராஜ்குமார் , அறையில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து சின்ராசுவின் கழுத்தில் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இது குறித்து திருமுருகன் பூண்டி போலீஸ் நிலைய த்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சின்ராசு உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜ்குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மது பாட்டில் பிரச்சினையில் பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.