பலத்த காற்றால் கிழிந்த வாழை இலைகள் 
செய்திகள்

பலத்த காற்றால் கிழிந்த வாழை இலைகள்- விவசாயிகள் கவலை

வாழை இலைகளில் கிழிசல் அதிகளவில் ஏற்படும்போது வாழைமரங்கள் குலை தள்ள தாமதம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

உப்புக்கோட்டை:

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, திராட்சை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி, குச்சனூர், கூழையனூர், பாலார்பட்டி, உப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் திசு வாழை, கற்பூரவள்ளி, நாட்டுவாழை, ரஸ்தாளி என பல்வேறு வகை வாழைகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த ஒருமாதமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வாழை இலைகளில் கிழிசல் அதிகளவில் ஏற்படுகிறது. சில சமயங்களில் பலத்த காற்றுக்கு வாழை மரங்கள் முறிந்து விழுகின்றன. இலைகளில் கிழிசல் அதிகளவில் ஏற்படும்போது வாழைமரங்கள் குலை தள்ள தாமதம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.