மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தேக்கம் அடைந்துள்ள வாழை இலை கட்டுகளை காணலாம். 
செய்திகள்

மதுரையில் ஒரு கட்டு வாழை இலை ரூ.100க்கு விற்பனை- விவசாயிகள், வியாபாரிகள் வேதனை

பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநில நகரங்களில் இருந்து வந்துள்ள வாழை இலை ஆர்டர்களும் ரத்தாகிவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மாலை மலர்

மதுரை:

தற்போது கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரம் அடைந்துள்ளது. எனவே நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வர உள்ளது. திருமணம் உள்ளிட்ட விழாக்களில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் எதிரொலியாக நேற்று வாழை இலை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

சுமார் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.1000 முதல் ரூ.1500 வரை கடந்த மாதம் விற்பனையானது. ஆனால் நேற்று மதுரை மாவட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.100 என்ற அளவிலேயே விலை போனது.

மேலும் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநில நகரங்களில் இருந்து வந்துள்ள வாழை இலை ஆர்டர்களும் ரத்தாகிவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார்கள்.

இதே நிலைதான் வாழை இலை விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்துள்ள வாழைகளில் இருந்து இலைகளை அறுவடை செய்து, கட்டுகளாக்கி சந்தைக்கு கொண்டு வந்து சேர்க்கும் வரை அதிக தொகை செலவிட வேண்டி இருக்கும். ஆனால், ரூ.100-க்கு கூட இலைக்கட்டு விற்பனையாகாமல் தேங்கி இருப்பதால், தங்களால் மேற்கொண்டு இலை அறுவடை செய்ய முடியாது எனவும், அதனால் தங்களுக்கு விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.