விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ராஜாமணி தொடங்கி வைத்த போது எடுத்த படம். 
செய்திகள்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர் ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

கோவை:

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று காலை நடைபெற்றது. இதை கலெக்டர் ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய கையெழுத்து இயக்கம், குறும்படம் திரையிடுதல், துண்டு பிரசுரம் வினியோகம், ராட்சத பலூன்கள் பறக்க விடுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

பேரணி டி.பி.சாலையில் தொடங்கி புரூக்பாண்ட் சாலை, அவினாசி ரோடு மேம்பாலம் வழியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் முடிவடைந்தது. இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்ன ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பழனிசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.