க.பரமத்தி:
கரூர் மாவட்டம், தென்னிலை வாழநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கவுதம் (வயது 25). பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தென்னிலை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஒரு தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ, கவுதம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கவுதம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் கவுதமை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவுதமை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கவுதம் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ டிரைவர் நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த சடையப்பன் (49) என்பவர் மீது தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கவுதமுக்கு திருமணமாகி ஒரு கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.