கோப்புபடம் 
செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி, வீரர் வீரமரணம்

காஷ்மீரில் ராணுவ அதிகாரி, வீரர் வீரமரணடைந்த சம்பவத்தையடுத்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர். 3 தினங்களில் நடந்த வெவ்வேறு சம்பவத்தில் காஷ்மீர் பண்டிட் உள்பட 7 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப் படை வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையின் போது ராணுவத்தின் ஜே.சி.ஓ. அதிகாரி மற்றும் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

கடந்த 10-ந் தேதி இரவு பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 5 ராணுவ வீரர்களும் பலியாகி இருந்தனர். இதற்கு பதிலடியாக 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து மேலும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

5 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து ஜம்மு- பூஞ்ச்- ரஜோரி பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நெடுஞ்சாலையை மூடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பூஞ்ச் - ரஜோரி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அங்குள்ள மென்தார் சப்- டிவி‌ஷனில் இருக்கும் நார்காஸ் வனப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

பாதுகாப்புப் படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜூனியர் கமி‌ஷண்ட் ஆபிசர் (ஜே.சி.ஓ.) மற்றும் ஒரு வீரர் காயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே இருவரும் பலியானார்கள்.

கடந்த 4 தினங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். ஏற்கனவே 5 பாதுகாப்புப் படை வீரர்களை கொன்ற அதே பயங்கரவாதிகள்தான் தற்போது ஜே.சி.ஓ. மற்றும் ஒரு வீரரின் பலிக்கு காரணமாக இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... போதைப்பொருள் குறித்து மோகன் பகவத் பேச்சு : கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத்