ஆய்வு செய்த ராணுவ தளபதி நரவானே 
செய்திகள்

சீனாவுடனான எல்லைப்பகுதிகளை பார்வையிட்ட ராணுவ தளபதி நரவானே

இந்திய ராணுவ தளபதி அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சீனாவுடனான எல்லைகளை அவர் பார்வையிட்டார்.

மாலை மலர்

இட்டாநகர்:

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சீன தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும், உண்மையான உயிரிழப்பு அதிகம் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். கல்வான் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளைக் குவித்தன.

போர் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பகுதிக்கு பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ தளபதி நரவானே சீனாவுடனான எல்லைப்பகுதிகளை பார்வையிட்டார். இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் அருணாச்சலபிரதேசம் சென்ற ராணுவ தளபதி எல்லையை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து மியான்மர் நாட்டுடனான எல்லைப் பகுதியையும் அவர் பார்வையிட்டார்.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டு மக்கள் பலரும் உயிருக்கு அஞ்சி அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வடகிழக்கு எல்லையில் ராணுவ தளபதி நரவானே ஆய்வு செய்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.