தலைமை தளபதி நரவானே 
செய்திகள்

புதிய தொழில்நுட்பம் சார்ந்த ராணுவம்: விரிவான வரைபடம் தயாராகிறது - தலைமை தளபதி நரவானே

வருங்கால சவால்களை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடனான விரிவான வரைபடம் தயாராகி வருகிறது என தலைமை தளபதி நரவானே இன்று கூறியுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்திய ராணுவ தினம் வருகிற 15ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இந்த ஆண்டுக்கான செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசினார்.  அவர் கூறும்பொழுது, கடந்த 2020ம் ஆண்டு முழுவதும் சவால்கள் நிறைந்த ஆண்டாக காணப்பட்டது.  அவற்றை தீர்க்கும் வகையில் எதிர்கொண்டோம்.

அவற்றில் முக்கிய சவாலானது கொரோனா பாதிப்பு மற்றும் வடஎல்லை பகுதிகள்.  எல்லைகள் முழுவதிலும் அதிதீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  நாம் அமைதியான முறையில் தீர்வு காண்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  ஆனால், எந்த எதிர்பாராத நிலையை சந்திக்கவும் தயாராக இருக்கிறோம்.  அனைத்து தளவாட பொருட்களும் தயாராக இருக்கின்றன.

வருங்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்ப திறன் வாய்ந்த ராணுவ அமைப்பினை கட்டமைப்பதற்காக, அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டு வருவதற்கான விரிவான வரைபடம் தயாராகி வருகிறது என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தினை தழுவி வருகிறது.  அதனை ஒருபோதும் நாம் சகித்து கொள்ளமாட்டோம்.  சரியான தருணத்தில் மற்றும் சரியான இடத்தில், தேர்ந்தெடுத்து பதிலடி கொடுப்பதற்கான உரிமை நமக்கு இருக்கிறது.  இந்த தெளிவான செய்தியை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.