அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி அருகே பழுதாகி நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதியதில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலியானார்.
அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூரைச் சேர்ந்தவர் லிங்கராஜ் (வயது 45). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் இரவு பணியாற்றினர்.
பின்னர் வேலை முடிந்ததும், நேற்று அதிகாலையில் லிங்கராஜ் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அரவக்குறிச்சி மணல்மேடு காக்காவாடிபிரிவு ரோடு அருகே வந்த போது, மும்பையிலிருந்து மதுரைக்கு நூல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதைகவனிக்காத லிங்கராஜ் ஸ்கூட்டருடன் லாரியின் பின்பக்கம் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.