கொரோனா வைரஸ் 
செய்திகள்

கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் நியமனம்

குமரி மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற நபர்களிடம் மாநில எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன அனுமதி ஆணையை சரிபார்த்து உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாலை மலர்

நாகர்கோவில்:

கொரோனா பரவலில் 3-ம் அலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குமரி-கேரள எல்லை பகுதியில் களியக்காவிளையில் உள்ள சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் ‘குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற நபர்களிடம் மாநில எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன அனுமதி ஆணையை சரிபார்த்து உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

களியக்காவிளை சோதனை சாவடியில் சோதனை சாவடி வழியாக வருகின்ற வாகனங்கள் மற்றும் நபர்கள் குறித்த விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து சோதனை சாவடி பொறுப்பு அலுவலரிடம் தினசரி அறிக்கை செய்ய ஏதுவாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பட்டதாரி, இடைநிலை மற்றும், உடற் கல்வி ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் என ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஒரு வாரத்திற்கு 6 பேர் வீதம் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்டு 31-ந்தேதி வரை இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. சோதனை சாவடி வழியாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்ற நபர்கள் வாகனங்கள் குறித்த விபரங்களை பதிவேட்டில் பதிவு செய்து பொறுப்பு அலுவலரிடம் தினசரி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.