தபால் நிலையம் 
செய்திகள்

அனைத்து தபால் நிலையங்கள் பகல் 2 மணி வரை செயல்படும்

விரைவு தபால்கள், பதிவு தபால்கள் மற்றும் பார்சல் சேவைகள் எவ்வித கால தாமதமும் இல்லாமல் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தேவையான ஊழியர்களையும் பணியில் ஈடுபடுத்த உரிய நடவடிக்கையை அஞ்சலக அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து அஞ்சலகங்களிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அனைத்து தபால் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். இது தொடர்பான தகவலை அறிவிப்பு பலகையில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும்.

விரைவு தபால்கள், பதிவு தபால்கள் மற்றும் பார்சல் சேவைகள் எவ்வித கால தாமதமும் இல்லாமல் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தேவையான ஊழியர்களையும் பணியில் ஈடுபடுத்த உரிய நடவடிக்கையை அஞ்சலக அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

அதே போல அஞ்சலகங்களில் பணிபுரியும் மற்றும் வீடுகளில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் விவரங்களை தினசரி குறித்து வைக்க வேண்டும். தபால் பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வழங்க வேண்டும்.

தபால் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல், சமூக இடை வெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வட்ட தபால்துறை அலுவலகம் சார்பில் அனைத்து அஞ்சல்துறை பிரிவு தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.