நாகர்கோவில்:
நாகர்கோவில் வெள்ளாளர் காலனி மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். டெல்லி மேல்சபை அ.தி.மு.க. உறுப்பினராக உள்ளார்.
கடந்த வாரம் டெல்லிக்குச் சென்ற விஜயகுமார் எம்.பி. சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 16-ந்தேதி டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு தொற்று இல்லை எனக்கூறப்பட்டது.
இந்த நிலையில் நாகர்கோவிலுக்கு வந்திருந்த விஜயகுமார் எம்.பி.க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து விஜயகுமார் எம்.பி. நேற்று இரவு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
விஜயகுமார் எம்.பி. வசித்து வரும் வெள்ளாளர் காலனி மேற்கு பகுதியில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நாகர்கோவில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்ததுடன் பிளிச்சிங் பவுடரும் தூவி உள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் காய்ச்சல் பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.