ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 13-ந் தேதி ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களையும், படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து இலங்கை சிறையில் தவித்து வந்த ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ராமேசுவரம் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் இலங்கை சிறையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தவித்து வந்த ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரும் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது 9 மீனவர்களையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டதுடன், இனி எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வந்தால் ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். மேலும் மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.