காத்மாண்டு:
நேபாளத்தின் தார்சுலா மாவட்டம் மகேந்திரநகர் நோக்கி நேற்று இரவு ஒரு பயணிகள் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து, பைதாடி மாவட்டத்தில் தஷ்ரத் சந்த் நெடுஞ்சாலையில் கோத்பே என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையை விட்டு விலகி சறுக்கிய பேருந்து, சுமார் 600 மீட்டர் தொலைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 ஆண்கள், 2 பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர். 34 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பேருந்தை ஓட்டிச் சென்ற அதன் உரிமையாளரும் பலத்த காயமடைந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.