வெறிச்சோடி கிடக்கும் உக்கடம் பஸ்நிலையம். 
செய்திகள்

கோவையில் 70 சதவீத பஸ்கள் இயங்காததால் வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் அவதி

கோவையில் பஸ்கள் 30 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டதால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.

மாலை மலர்

கோவை:

போக்குவரத்து ஊழியர்கள் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இன்றும் 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டிடபிள்யூ.யு. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு உள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக நேற்று 50 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக பணியாளர்களை கொண்டு நேற்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டது.

இன்று 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். இதன் காரணமாக இன்று கோவை மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. நேற்று பஸ்களை இயக்கியவர்கள் தொடர்ந்து எங்களால் ஓய்வு எடுக்காமல் பஸ்சை இயக்க முடியாது என கூறிவிட்டனர். இதனால் கோவையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், கிராமபுற பகுதிகளுக்கு ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. மாநகர பகுதியில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டது.

பஸ்கள் 30 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டதால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். மேலும் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான பஸ்கள் இயங்காததால் கோவையில் காந்திபுரம் பஸ்நிலையம், உக்கடம் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் ஆகியவை பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் இயங்காததால் பஸ்சை நம்பி பயணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

இதேபோல போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், கிராமபுறங்களுக்கு செல்லும் மக்கள், நீலகிரியில் இருந்து வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் ஆகியோர் சிரமத்துக்குள்ளானார்கள்.