பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலை. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி என்ற செல்வி (வயது 50). இவர் அயனாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் சொந்த வேலையாக பெரம்பலூர் செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார்.
வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் அவர் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் வந்தனர். செல்விக்கு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்பக்கம் அமர்ந்திருந்த நபர், திடீரென செல்வியின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் சங்கிலியை பறித்தார். பின்னர் அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதனால் செல்வி அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். சங்கிலியை பறித்தபோது செல்வியின் கழுத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.