கோப்புபடம் 
செய்திகள்

திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.10.25 கோடி செம்மரம் பறிமுதல் - 6 பேர் கைது

திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.10.25 கோடி மதிப்புள்ள செம்மரத்தை பறிமுதல் செய்த போலீசார் திருவண்ணாமலையை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

மாலை மலர்

திருப்பதி: 

ஆந்திர மாநிலம் திருப்பதி முதல் கடப்பா வரை உள்ள சேஷாசல வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன.

இந்த செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு உள்ளதால் செம்மரங்களை வெட்டி கடத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் உள்ள கொல்லமடுகு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் 10 டன் எடையுள்ள 359 செம்மரங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் லாரியில் இருந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பதியை சேர்ந்த நாகராஜ் (வயது 40), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் (23), பிரபு (23), சம்பு (32), அப்பாசாமி (35), துரைராஜ் (32), விஜயகுமார் (21) என தெரியவந்தது.

ஆந்திராவில் இருந்து சென்னை பெரம்பூரில் உள்ள குடோனுக்கு செம்மரங்களை கடத்தி செல்வதாக கூறினர். இதையடுத்து 7 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இந்த செம்மரக் கடத்தலில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது. செம்மரம் கடத்தலில் உள்ள முக்கிய நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.10.25 கோடி மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.