போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை படத்தில் காணலாம் 
செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 500 மாணவ- மாணவிகள் கைது

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மாநில அரசுகளின் இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஜனாதிபதி ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

மாலை மலர்

சென்னை:

இந்திய மாணவர் சங்கம் சார்பில் அகில இந்திய அளவில் நீட் ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது.

கல்வியியல் செயல்பாட்டுக்கு எதிராக தகுதி, திறமைகளை புறம்தள்ளி மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட் டம் நடந்தது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மாநில அரசுகளின் இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஜனாதிபதி ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

கிண்டி ராஜ்பவனில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக சின்ன மலை ராஜீவ்காந்தி சிலை அருகில் மாணவர் சங்கத்தினர் திரண்டனர்.

நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். மாணவர்கள் மத்தியில் அகில இந்திய மாணவர் சங்க பொதுசெயலாளர் மயூக் பிஸ்வாஸ் உரை நிகழ்த்தினார்.

இந்த போராட்டத்தை தமிழக மாணவர் சங்கத்தலைவர் கண்ணன், மாநில செயலாளர் மாரியப்பன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினார்கள். சென்னையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

கவர்னர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் செல்லாதபடி போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். தடுப்பு வளையங்களும், பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. அதனை மீறி மாணவ- மாணவிகள் அங்கிருந்து ஊர்வலமாக கவர்னர் மாளிகை நோக்கி புறப்பட்டனர்.  

சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே வந்த போது அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு சமுதாயக்கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பும் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்...பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு