ஷில்லாங்:
மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலை மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சுரங்கத்தினுள் தண்ணீர் புகுந்தது. இதனால் சுரங்கத்தில் பணியாற்றிய 5 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் 12 நாட்கள் ஆகியும் தொழிலாளர்களை மீட்க முடியவில்லை.
எனவே, இந்திய கடற்பயின் உதவியை மேகாலயா அரசு கேட்டுள்ளது. மீட்பு பணிக்கு உதவுவதற்காக கடற்படையின் நீர்மூழ்கி வீரர்களை அனுப்பும்படி மத்திய பாதுகாப்புத்துறைக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர் கான்ராட் கே.சங்மா கூறி உள்ளார்.
விபத்து நடந்த நிலக்கரி சுரங்கமானது, அரசின் தடையை மீறி சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கம் ஆகும். விபத்து நடந்ததையடுத்து நிலக்கரி சுரங்க உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.