ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள பொம்பே மற்றும் கோபால்புரா ஆகிய 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த இரண்டு கிராமங்களிலும் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரு கிராமங்களிலும் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதகாவும் காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.