சாதனை படைத்த ஆதவனை போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் பாராட்டிய போது எடுத்தபடம். 
செய்திகள்

ஒரத்தநாடு அருகே 53 உலக நாடுகளின் தலைநகரங்கள் பெயர்களை சரளமாக ஒப்புவிக்கும் 3 வயது சிறுவன்

53 உலக நாடுகளின் தலைநகரங்கள் பெயர்களை சரளமாக ஒப்புவிக்கும் 3 வயது சிறுவனை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் பாராட்டினார்.

மாலை மலர்

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த ஒட்டல் உரிமையாளர் தர்மபாலா-முத்துலட்சுமி ஆகியோருக்கு அகரன் (வயது10), ஆதவன் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை வெறும் 48 விநாடிகளிலும், 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், இந்தியாவின் 7 தேசியச்சின்னங்கள், தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்கள், 16 வகை செல்வங்கள் என அனைத்தையும் சரளமாக ஒப்புவிக்கிறார். ஏற்கனவே ஆதவன் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்று சாதனை படைத்தார். தற்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம் பிடித்து தொடர் சாதனை படைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஆதவனின் பெற்றோர்கள், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்யை நேரில் சந்தித்து ஆதவனின், கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் காண்பித்தனர். இவைகளை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாதனை படைத்த ஆதவனை பாராட்டினார்.

இதுகுறித்து ஆதவனின் தாய் முத்துலெட்சுமி கூறுகையில், கொரோனா ஊரடங்கு காலங்களில், வீட்டில் முடங்கி விடாமல், ஆதவனுக்கு அனைத்தையும் தொடர்ந்து சொல்லி கொடுத்ததாக கூறினார்.