கோப்புபடம் 
செய்திகள்

உச்சிப்புளி அருகே மாடுகள் திருடிய 3 பேர் கைது

உச்சிப்புளி அருகே மாடுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனைக்குளம்:

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மாடு மற்றும் ஆடு திருட்டு போவதாக புகார் வந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்படி, உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் சிறப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு கால்நடைகள் திருடர்களை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து செம்படையார்குளம் அருகே உள்ள மாடுகளை திருடி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த வர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர்.

அப்போது சரியான விவரங்கள் தெரிவிக்காததால் சந்தேகமடைந்த போலீசார் பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது24), குமரேசன் (27), ஈஸ்வரன் (55) ஆகிய 3 பேரை பிடித்து மாடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் மாடு திருடும் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.