ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, நேற்று முன்தினம் வருவாய்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரில் வந்த 3 பேரிடம், சோதனை நடத்தப்பட்டது. அவர்களது காரின் மறைவான பகுதியில் தங்க கட்டிகள் இருந்தன. அவற்றில் வெளிநாட்டு முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.11.63 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. காரில் இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மூவரும் கோர்ட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
முதல்கட்ட விசாரணையில் இந்த தங்கம் கவுகாத்தியில் இருந்து ஐதராபாத் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தங்க கடத்தல் வாகனம், அசாம், மேற்குவங்காள மாநிலங்களை தடையின்றி கடந்து வந்து ஐதராபாத் வாகன சோதனையில் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.