பேரையூர்:
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வில்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோபாலபுரம் பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில் அங்குள்ள காட்டில் ஆட்டு கிடையில் அடைக்கப்பட்டு இருந்த 21 ஆடுகள் கருகி செத்தன. இதில் கோபாலப்புரத்தை சேர்ந்த மாரிச்சாமி என்பவருக்கு சொந்தமான 16 ஆட்டுக்குட்டிகளும், செல்வம் என்பவருடைய 5 ஆட்டுக்குட்டிகளும் இறந்தது குறிப்பிட்டத்தக்கது.
ஆட்டுக்கிடையில் மின்னல் தாக்கியதில் ஆடுகள் செத்து கிடப்பதை பார்த்து அதன் உரிமையாளர்கள் கண்கலங்கினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். செத்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மின்னல் தாக்கியதில் ஆடுகளை இழந்த உரிமையாளர்கள் கூறும் போது, நாங்கள் ஆடுகளை வளர்த்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். திடீரென்று மழை பெய்து மின்னல் தாக்கியதில் நாங்கள் வளர்த்து வந்த ஆடுகள் செத்து விட்டன. எனவே அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.