கைது 
செய்திகள்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: பெண் உள்பட 2 பேர் கைது

சாத்தூரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்ததுடன் அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலகாந்திநகரில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுகிறது என பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படையை சேர்ந்த உஷா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது பணப்பட்டு வாடா செய்ததாக கூறி அதேபகுதியை சேர்ந்த வெயிலா (வயது 50) என்ற பெண்ணிடம் இருந்து ரூ.42 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல குருலிங்காபுரத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக இன்பராஜ் (54) என்பவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெயிலா, இன்பராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.