ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஜனாதிபதி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததால் இருசக்கர வாகன சோதனையை போலீசார் மேற்கொள்ளாமல் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முதல் ஊட்டியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, ஏ.டி.சி., மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. ஊட்டி நகரில் நேற்று ஹெல்மெட் அணியாமல் சென்ற 100-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.