விவசாயிகளுக்கு ஆதரவாக மன்னார்குடியில் இணையதள நண்பர்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம். 
செய்திகள்

மன்னார்குடியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் செல்ல முயன்ற 100 பேர் கைது

மன்னார்குடியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் செல்ல முயன்ற 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

மன்னார்குடி:

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மன்னார்குடியில் இணையதள நண்பர்கள் அமைப்பின் சார்பில் நேற்று ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று மன்னார்குடி தேரடியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலம் செல்வதற்காக குவிந்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அதே இடத்தில் மத்திய அரசை கண்டித்தும், சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 100 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர்.