ஜெய்ப்பூர்:
ராஜ்ஸ்தான் மாநிலத்தின் சித்தார்ஹர் மாவட்டத்தில் உள்ள உதய்ப்பூர்-நிம்பஹிரா நெடுச்சாலையில் இன்று இரவு 10 மணியளவில் ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது.
அந்த ஜீப்பில் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் 20-க்கும் அதிகமானோர் ஆன்மீக சுற்றுலாவுக்காக ராஜஸ்தானில் உள்ள சன்வாலியா சேது கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
ஜீப் சித்தார்ஹர் மாவட்டத்தின் சர்தார் ஹிடா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் மறுபுறம் வேகமாக வந்த லாரி ஜீப்பை கடந்து செல்ல முற்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த ஜீப் மீது பயங்கரவேகத்தில் மோதியது.
இந்த கோர விபத்தில் ஜீப் பலத்த சேதமடைந்து நொறுங்கியது. இந்த கோர மோதலில் ஜீப்பில் இருந்த பயணிகள் 10 சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்கள் 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், உயிரிழந்த 10 பேரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் மோதலில் ஈடுபட்ட ஜீப்பும்-லாரியும் அதிவேகத்தில் வந்ததே இந்த விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.