ஆமதாபாத்:
குஜராத் மாநிலத்தில், முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்காக தனியார் வங்கியில் கொடுத்திருந்தவர்களன் ஆவணங்களை பயன்படுத்தி ஒரு கும்பல் விலையுயர்ந்த செல்போன்கள வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளது. செல்போன் வாங்கியதற்கான தவணை தொகை தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பிடித்து செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஒருவர் இதுபற்றி ஆமதாபாத் போலீசில் புகார் கொடுத்தார்.
அப்போது தான், அவர் முத்ரா யோஜனா கடன் திட்டத்துக்காக கொடுத்திருந்த ஆவணங்களை பயன்படுத்தி, அவரது பெயரில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் அந்த தனியார் வங்கி ஊழியர் ஒருவர் உள்பட 4 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அந்த கும்பல் இதுவரை 10 பேரின் ஆவணங்களை பயன்படுத்தி செல்போன்கள் வாங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.