கோவை:
அலோபதி டாக்டர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேத டாக்டர்களும் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் நித்யோக் அமைப்பு, 4 குழுக்களை அமைத்து மருத்துவ கல்வி, பொதுமக்களுக்கான சுகாதார முறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகியவற்றை இணைத்து ஒரே மருத்துவ முறையாக வருகிற 2030 ஆண்டில் நடமுறைப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த கலப்பட மருத்துவ முறை பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், கலப்பட மருத்துவ முறை வேண்டாம் எனவும் வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பாக நேற்று தமிழகம் முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் 800 தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. இருப்பினும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டது. பிற எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலப்பட மருத்துவ முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கருப்பு பட்டை(பேட்ஜ்) அணிந்து டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலக வளாகத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகி டாக்டர் எம்.ரவிசங்கர் கூறும்போது, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 650 டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து, ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார்.