புதுடெல்லி:
டெல்லி மாநிலத்தை கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வந்தாலும், அங்குள்ள 3 மாநகராட்சிகளும் பா.ஜ.க. வசம் உள்ளன. இந்த 3 மாநகராட்சிகளுக்கும் தர வேண்டிய நிலுவை தொகையை கெஜ்ரிவால் அரசு தரவில்லை என தெரிகிறது. இதை கண்டித்து கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக கடந்த 1 வாரமாக மேயர்களும், பா.ஜ.க.வினரும் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாநகராட்சிக்கு தர வேண்டிய நிலுவை தொகையை கெஜ்ரிவால் அரசு உடனே தர வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் நேற்று போராட்டங்கள் நடத்தினர். புராரி சட்டசபை தொகுதியில் நடந்த போராட்டத்தில் டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா பங்கேற்று பேசுகையில், “மாநகராட்சிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகை ரூ.13 ஆயிரம் கோடியை கெஜ்ரிவால் அரசு வழங்கும் வரையில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என கூறினார். அதே நேரத்தில் மாநகராட்சிகளுக்கு தர வேண்டிய அனைத்து நிதிகளும் தரப்பட்டு விட்டன, ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக மாநகராட்சிகளில் நிதி குழப்பம் நிலவுகிறது என ஆம் ஆத்மி கட்சி கூறுவது குறிப்பிடத்தக்கது.