செய்திகள்

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்

தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 13-வது சம்பள கமிஷன் அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நீடித்ததால், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அத்துடன், பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் எச்சரித்தது.

தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்யைன் மற்றும் தங்கமணி ஆகியோர் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது.

குறிப்பாக முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் நிலுவைத் தொகை தர அரசு ஒப்புதல் அளித்தது. இரண்டாம் கட்டமாக 250 கோடி ரூபாயும், அடுத்து படிப்படியாக மீதமுள்ள நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 3 மாதத்திற்கு பிறகு தொழிலாளர்களின் பிடிப்புத் தொகை கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

SCROLL FOR NEXT