சென்னை:
ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆடி மாதத்துக்கான அம்மன் கோவில் சுற்றுலா வருகிற 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு வெள்ளி மற்றும் திங்கள் இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.
வைத்தீஸ்வரன் கோவில், தஞ்சை, மதுரை, திருச்சியில் இரவு தங்க வைக்கப்படுவார்கள். ஒருவருக்கு பஸ் மற்றும் தனி அறையுடன் சேர்ந்து கட்டணம் ரூ.8,500 ஆகும். இருவர் தங்கும் அறையில் ஒருவருக்கு ரூ.6,300, சிறுவர்களுக்கு ரூ.5,300 ஆகும்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் சுற்றுலா வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) புறப்பட்டு ராமேஸ்வரம் தரிசனம் முடித்துவிட்டு ஆகஸ்டு 1-ந்தேதி காலை சென்னை வந்தடையும்.
இதற்கு ஒருவருக்கு பஸ், தனி அறையுடன் கட்டணம் ரூ.4,400 ஆகும். இருவர் தங்கும் அறையில் ஒருவருக்கு ரூ.4 ஆயிரம் ஆகும்.
ஒரு நாள் சக்தி சுற்றுலா செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 6.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு சென்னை வந்தடையும் ஒரு நபருக்கு ரூ.725 கட்டணம் ஆகும்.
அம்மன் கோவில் ஆன்மீக சுற்றுலா குறித்த தகவல்களுக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம்.
மேலும் 044-2533 3333, 2533 3444 என்ற எண்களிலும், 180042 531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். www.ttdconline.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.