செய்திகள்

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை மிரட்டியது தமிழக போலீசா?: பரபரப்பு தகவல்கள்

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வாகனத்தை வழிமறித்து விசாரித்தது தமிழக போலீசாரா? அல்லது வேறு நபர்களா? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

போலீசார் தேடுவதை அறிந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அந்த விடுதியில் இருந்து திடீரென தலைமறைவானார். தங்க தமிழ்செல்வன் உள்பட மற்ற எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அந்த விடுதியில் தொடர்ந்து தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அந்த விடுதிக்கு செல்வார் என்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுவார் என்றும் கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது வரை அவர் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசவில்லை. அதனால் எப்போது நம்மை சந்தித்து பேசுவார், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் தலை காவிரிக்கு சென்று நீராடி விட்டு திரும்பிய போது கர்நாடக பதிவெண் கொண்ட 2 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் தமிழக போலீசார் என்று கூறி எம்.எல்.ஏ.க்கள் சென்ற வாகனங்களை வழிமறித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது எம்.எல்.ஏ.க்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.உடனே போலீசார் என்று கூறிய அந்த நபர்கள் அதிர்ச்சி அடைந்து தாங்கள் வந்த வாகனங்களில் ஏறி அங்கிருந்து சென்றனர். இதனால் எம்.எல்.ஏ.க்கள் வாகனத்தை மறைத்து விசாரணை நடத்தியவர்கள் தமிழக போலீசாரா? அல்லது வேறு நபர்களா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.