சென்னை:
3-வது தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது.
இதில் 6 நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் 59 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 4 சிறுவர்களும், 5 சிறுமிகளும் ஆக மொத்தம் 9 பேர் இடம் பெற்றனர்.
தெற்காசிய ஜுனியர் தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 3 வெள்ளி ஆக மொத்தம் 8 பதக்கம் வென்றனர்.
சிறுவர்களுக்கான டிரிபிள் ஜம்பில் கமல்ராஜ், சிறுமிகளுக்கான டிரிபிள் ஜம்பில் பிரியதர்ஷினி, கிரேசெனா மெரிகிளைடஸ் (உயரம் தாண்டுதல்), புனிதா ராமசாமி (நீளம் தாண்டுதல்) ஆகியோர் தங்கம் வென்றனர். நிதின் (200 மீட்டர் ஓட்டம்), சுபா வெங்கடேஷ் (400 மீட்டர் ஓட்டம்) காருண்யா (வட்டு எறிதல்) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
தெற்காசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக சிறுவர், சிறுமியருக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் நீதா ஹரீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதக்கம் வென்றவர்களை பாராட்டினார். தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.