தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 
செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு- திருவள்ளூர் மாணவி ஸ்ருதி முதலிடம்

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 8-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.

நீட் தேர்வு முடிவு கடந்த மாதம்(ஜூன்) 5-ந் தேதி வெளியானதும், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், மாணவ- மாணவிகள் தங்களுடைய சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். இதையடுத்து நாளை மறுநாள் (ஜூலை 8) கலந்தாய்வு தொடங்குகிறது. 8-ந் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

மருத்துவ கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் திருவள்ளூர் மாணவி ஸ்ருதி முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றதையடுத்து தரவரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார்.

ஈரோடு மாணவர் அஸ்வின்ராஜ், கோயம்புத்தூர் மாணவி இளமதி ஆகியோர் 2, 3வது இடங்களை பெற்றுள்ளனர்.