புளூ வேல் விளையாடிய மதுரை மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியை அடுத்த மொட்டமலையை சேர்ந்தவர் ஜெயமணி. பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய 2-வது மகன் விக்னேஷ் (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போனை அவருடைய பெற்றோர் வாங்கிக்கொடுத்தனர்.
தடை செய்யப்பட்ட புளூ வேல் விளையாட்டை அந்த செல்போன் மூலம் அவர் விளையாடி உள்ளார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அவரது வலது கையில் திமிங்கலத்தின் உருவத்தை வரைந்திருந்தார். மேலும் அவரது நோட்டுப்புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், “நீலத்திமிங்கலம் விளையாட்டல்ல. விபரீதம். உள்ளே சென்றால், வெளியே வர முடியாது” என்றும் எழுதி வைத்திருந்தார்.