பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
அதன்பின்னர், நேற்று முன்தினம் புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை, இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என கூறியிருந்தது. இந்த நேரத்தில் மாநில அரசு மாற்றம் செய்யலாம் என்றும் கூறியிருந்தது.