செய்திகள்

ஈரானில் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஈரானில் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.#Palaniswamy #TamilnaduFishermen #Modi

மாலை மலர்

சென்னை:

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்களின் பரிதாப நிலையை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இவர்கள் 15 பேரும் ஈரான் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டு அங்குள்ள ‘கிஷ்’ தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

துபாய் மீன்பிடி தளத்தில் இருந்து 22.10.17 அன்று 2 எந்திரப் படகுகளில் சென்று அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கவனம் தப்பிய நிலையில் ஈரான் கடல் பகுதிக்கு அவர்கள் சென்றதால் அங்கு 24.10.17 அன்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு ஈரான் கோர்ட்டு அபராதம் விதிப்பதாகத் தெரிகிறது. மேலும் அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்களின் உதவியோடு அந்தத் தொகையை 15 மீனவர்களும் செலுத்த வேண்டும். எனவே நீங்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு, தெக்ரான் மற்றும் ஐக்கிய அரசு நாடுகளில் உள்ள தூதகரத்தைத் தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு சட்ட உதவியை செய்து 15 பேரையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.