ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம், ஆடவருக்கான (77 கிலோ எடைப்பிரிவு) பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார்.
தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஜனாதிபதி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்நிலையில், சதீஷ் குமாரின் சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சதீஷ் குமாருக்கு அவர் வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். தமிழக அரசு சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார். #CommonwealthGames #SathishSivalingam