சென்னை:
தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை அரங்கத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் மாஸ்க் அணிந்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்பிக்கள் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட மாஸ்க் அணிந்திருந்தனர்.
மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்பி உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனாவால் இறந்தவர்களுக்கும் அங்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின்னர் சட்டசபை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மொத்தம் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு இல்லாத உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.