அமைதி ஒப்பந்தம் கையெழுத்து - கோப்புப்படம் 
செய்திகள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் முறியும் - தலீபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் முறியும் என தலீபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.  இதன் பலனாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருதரப்புக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

எனினும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.  இந்த நிலையில் அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் முறியும் என தலீபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி சிறையில் உள்ள 5 ஆயிரம் தலீபான் கைதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் தரவில்லை என தலீபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஒப்பந்தத்தை மீறி தங்கள் அமைப்பினர் மீது அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதாகவும், இது நம்பிக்கை துரோகம் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா தொடர்ந்து இதே போக்கை கையாண்டால் அந்த நாட்டு அரசுடன் ஏற்படுத்திக்கொண்ட அமைதி ஒப்பந்தம் விரைவில் முறியும் என்றும் தலீபான்கள் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT