செய்திகள்

ராம்கர் படுகொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதல் மந்திரி ரகுபர் தாஸ்

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் நடந்த படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல் மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டம் பஜர்தண்ட் கிராமத்தை சேர்ந்தவர் அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி. இவர் நேற்று மாருதி வேனில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதை அறிந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து, கடுமையாக தாக்கியது. மாட்டிறைச்சி ஏற்றி வந்த வேனையும் தீ வைத்து எரித்தது.

இதில் படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் ராம்கர் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டு தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராம்கர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு முதல் மந்திரி ரகுபர் தாஸ் உத்தரவிட்டுள்ளார்.