செய்திகள்

இம்ரான்கான் மாளிகை மீது முதல் நடவடிக்கை எடுங்கள்- பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு

ராவல் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் வீடு மீது தலைநகர் வளர்ச்சி ஆணையம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Imrankhan

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பானிகாலா பகுதியில் ராவல் ஏரி உள்ளது. அதை ஆக்கிரமித்து வசதி படைத்தவர்கள் ஆடம்பர மாளிகைகள் கட்டியுள்ளனர்.

இதனால் ராவல் ஏரி மாசு அடைந்துள்ளது. எனவே பானிகாலா பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாளிகைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் விசே‌ஷம் என்னவென்றால் இப்பகுதியில் பிரதமர் இம்ரான்கானின் 5 படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர மாளிகையும் உள்ளது. அது சரிவர திட்டமிடாமலும், ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சாகிப் நிஷார் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் வீடு மீது தலைநகர் வளர்ச்சி ஆணையம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமித்து கட்டிய குற்றத்துக்காக இம்ரான்கான் உரிய அபராத தொகையை செலுத்த வேண்டும்.

அதன்பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மற்ற வீடுகள் மீது நடவடிக்கையை தொடங்க வேண்டும் என தலைமை நீதிபதிகள் நிஷார் உத்தரவிட்டார். அதற்கு பதில் அளித்த இம்ரான் கான் வக்கீல் பாபர் அவான் தலைநகர் வளர்ச்சி ஆணையத்தின் நடவடிக்கைக்கு இம்ரான் கான் ஒத்துழைப்பார் என உறுதி அளித்தார். #Imrankhan