செய்திகள்

நிலக்கோட்டை அருகே ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வறியோர் நிவாரண தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் (வயது 52). இதே பிரிவில் வருவாய் ஆய்வாளராக சின்னக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

நிலக்கோட்டை அருகே உள்ள மெட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி கேசம்மாள் (42). கடந்த ஜனவரி மாதம் பாம்பு கடித்து இறந்து விட்டார். அவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை பெறுவதற்காக கேசம்மாளின் சகோதரர் ஜோசப் செல்வராஜ் (52) தாசில்தார் சரவணனிடம் விண்ணப்பம் அளித்திருந்தார்.

இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனில் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என தாசில்தாரும், ரமேசும் கூறியுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஜோசப் செல்வராஜ் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகளை ஜோசப் செல்வராஜ் தாசில்தாரிடம் வழங்கினார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன், ஆய்வாளர்கள் ரூபாகீதா ராணி, கீதா ஆகியோர் சரவணன் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.